மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கனது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது, இந்த வழக்கில் சாட்சியமளித்த மூவர் பல முக்கிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ள நிலையில், முதலில் சாட்சியமளித்த யசாரா அபேநாயக்க, “வழக்குக்கு காரணமாகவுள்ள தெஹிவளை மிஹிந்து மாவத்தையில் அமைந்துள்ள வீட்டிற்கு நான் சென்றிருக்கின்றேன்.
நானும் யோஷித ராஜபக்சவும் திருமணம் செய்து கொண்டு அந்த வீட்டில் குடியேறத் திட்டமிட்டிருந்தோம். அந்த வீடு யோசித்த ராஜபக்சவினாலேயே நிர்மாணிக்கப்பட்டது என்பது எனக்குத் தெரியும்.
வீடு நிர்மாணிக்கப்பட்ட காலத்தில் யோசித்த கடற்படையில் பணியாற்றியதுடன், CSN அலைவரிசையின் பணிகளுக்கும் உதவி வந்தார் என குறிப்பிட்டுள்ளார்.
பிரதிவாதி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எழுப்பிய குறுக்குக் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், அந்த வீடு பல அறைகளைக் கொண்ட மிகப்பெரிய மாளிகை என்று குறிப்பிட்டார்.
வழக்கின் மற்றுமொரு சாட்சியான காணி உரிமையாளர் லூஷன் ரத்நாயக்க நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில், “இரத்மலானை கெகட்டிய வீதியில் அமைந்துள்ள தனது 31 பேர்ச் காணியை விற்பனை செய்வதற்காக, தனது நண்பரான வசந்த குமார ஜயசூரியவிடம் ஒப்படைத்தேன்.
பின்னர், வசந்த குமார கொள்வனவு செய்வதற்கு ஒருவரை அழைத்து வந்தார் ஆனால் அவர் யார் என்று எனக்கு தெரிவிக்கப்படவில்லை. பின்னர், 34.5 மில்லியன் ரூபாவுக்கு ராஜகிரியவில் உள்ள வங்கியில் காணி விற்பனைக்கான உறுதிப்பத்திரம் கையெழுத்திடப்பட்டது.
எனது வங்கிக் கணக்கில் பணம் வைப்பிலிடப்பட்ட பின்னரே உறுதிப்பத்திரத்தில் கையெழுத்திட்டேன். அந்தப் பணத்தை யார் வைப்பிலிட்டார்கள் என எனக்குத் தெரியாது.
எனினும், உறுதிப்பத்திரத்தில் வாங்குபவராக டேசி பொரஸ்ட் என்ற பெண்ணின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், இந்தக் காணியை விற்பனை செய்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக, வீட்டில் உள்ள பொருட்களை விற்பனை செய்வதற்காக நடத்தப்பட்ட கேரேஜ் சேல் ஒன்றின் போது, யோஷித தனது காதலியுடன் அந்த வீட்டிற்கு வந்திருந்தார்” என குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மூன்றாவது சாட்சியாக முன்னிலையான வசந்த குமார ஜயசூரிய, “யசாரா அபேநாயக்க எனது உறவினர் மகள். அவரும் யோசித்தவும் மோதிரம் மாற்றிக் கொண்டு நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.
லூஷன் ரத்நாயக்கவின் காணியை வாங்குவது தொடர்பாக யோஷித என்னிடம் கலந்துரையாடி அதை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்தார். அதற்கமைய, ராஜகிரிய வங்கியில் உறுதிப்பத்திரங்கள் கையெழுத்திடப்பட்டது.
அந்தச் சந்தர்ப்பத்தில் காணியை வாங்குவதற்குத் தேவையான பணத்தைப் பைகளில் கொண்டு வந்தது பாதுகாப்புப் பணியாளர்கள் போன்ற தோற்றம் கொண்ட நபர்கள் குழுவினர்களாகும் என வசந்த குமார ஜயசூரிய நீதிமன்றத்தில் மேலும் சாட்சியமளித்தார்.