முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்குகள் உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், அவற்றை மீண்டும் விசாரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதனை தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் அரசாங்கங்களைச் சேர்ந்த பல அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிரான வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சதொச வழக்கிலிருந்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் கையெழுத்துக்களும் இல்லை என்ற ஆரம்ப ஆட்சேபனையை ஏற்றுக்கொண்டு, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுவிக்கப்பட்டார்.
பின்னர், லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தினால் அந்த தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதுடன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் ஆணையாளரின் கையெழுத்துடனும் வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என குறித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி, குறித்த நிபந்தனையின் அடிப்படையில் விலக்கிக் கொள்ளப்பட்ட மகிந்த ராஜபக்சவின் சொத்து வழக்கு, கோட்டாபய ராஜபக்சவின் சொத்து வழக்கு, பஸில் ராஜபக்சவின் 5 சொத்து வழக்குகள், நாமல் ராஜபக்ச மற்றும் யோஷித ராஜபக்ச ஆகியோரின் 3 வழக்குகள், ரோஹித அபேகுணவர்தனவின் வழக்கு ஒன்று, கெஹெலிய ரம்புக்வெல்லவின் வழக்கு ஒன்று உள்ளிட்ட பல வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் அனைத்தும் ஒரே ஆணையாளரின் கையெழுத்துடன் வழக்கு தொடரப்பட்டமை காரணமாக அவை மீள பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.