மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம் திகதி முதல் 1990 ஜனவரி வரை மாத்தளை மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாகக் கடமையாற்றியவர் லெப்டினன்ட் கேர்ணல் கோட்டாபய ராஜபக்ச.
குறிப்பிட்ட காலத்தில் பாதுகாப்பு தொடர்பிலான அனைத்து பொறுப்புக்களும் இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரிக்கே வழங்கப்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளதுடன், இந்த மனித புதைக்குழியானது கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் தான் அன்று இராணுவ முகாம் இருந்துள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துடன் கோட்டாபய ராஜபக்ச சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகம் அதிகரித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க அன்று முன்னிலையில் செயற்பட்டவராவார்.
மாத்தளை மாவட்டத்தில் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் Bio Gas நிலையம் ஒன்றை அமைப்பதற்காக நிலத்தை அகழ்ந்த போது இந்த மனித புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் அஜித் ஜயசேன ஆகியோரின் விசாரணைகளின் அடிப்படையில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
மேலும், அன்றைய ராஜபக்ச அரசாங்கம் இதுகுறித்து ஒரு ஆணைக்குழுவை நியமித்தது. அந்த ஆணைக்குழுவின் அறிக்கையில், இந்த எச்சங்கள் 1950-க்கு முந்தியவை என்று கூறப்பட்டது.
ஆனால் பேராசிரியர் ராஜ் சோமதேவவும் வைத்தியர் அஜித் ஜயசேனவும் தெளிவாக, இவை 1986 முதல் 1990 வரையிலான காலப்பகுதியில் நிகழ்ந்த கொலைகளுடன் தொடர்புடையவை எனக் குறிப்பிட்டனர்.
இந்த உடல்களில் பலவற்றில் சித்திரவதைக்கான தெளிவான அடையாளங்கள் காணப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் இன்று நீதிமன்றம் ஒரு உத்தரவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கமால் குணரத்ன மற்றும் ஷவேந்திர சில்வா போன்ற இராணுவ அதிகாரிகளும் சில காலங்களில் அந்தப் பகுதிகளை பொறுப்பேற்றிருந்ததாகக் கூறப்படுவதனால் இந்த விடயம் பேசுபொருளாகியுள்ளது.
அத்துடன், 1988–89 காலப்பகுதியில் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் நாடு முழுவதும் உத்தியோகப்பூர்வமாக அல்லது உத்தியோகப்பூர்வமற்ற வகையில் கொலைக் குழுக்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
மேலும், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டதுடன், அவர்களின் உடல்கள் ஆறுகள், ஏரிகள் போன்ற இடங்களில் மறைக்கப்பட்டதாகவும், காலப்போக்கில் சில ஆதாரங்கள் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் மாத்தளை கூட்டுப் புதைகுழி அவற்றில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பல்வேறு பட்ட முறைப்பாடுகளை நீதி கிடைக்காமல் போயுள்ள நிலையில், அண்மையில் சட்டத்தரணி ஹிமாலி குலரத்ன, மாத்தளை மனித புதைகுழி தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
குறித்த மனுவில், சுமார் 155 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட எச்சங்களுக்கு DNA பரிசோதனை நடத்தவும் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை பரிசீலித்த மாத்தளை நீதிவான், இது நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்கு என்றும், பல விடயங்களை ஆய்வு செய்ய வேண்டியிருப்பதால் உடனடியாக உத்தரவு வழங்க முடியாது என்றும் தெரிவித்தார்.
அத்துடன் மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் ஜூலை 16 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.