தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா விண்ணப்பங்களை ஏற்பதை உடனடியாக இடைநிறுத்தியுள்ளது.
சுற்றுலா வீசாக்கள் நிறுத்தப்பட்டுள்ள போதிலும், இலங்கைப் பிரஜைகள் பின்வரும் குறிப்பிட்ட காரணங்களுக்காகத் தொடர்ந்து வீசாவிற்கு விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தாய்வான் அரசாங்க அமைப்புகளின் அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்படும் பயணங்கள் , கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்ற நடவடிக்கைகள், குடும்ப உறுப்பினர்களைப் பார்ப்பதற்கான பயணம், வர்த்தகம் மற்றும் வணிக நோக்கங்கள், தாய்வானில் உள்ள கப்பல்களில் பணியாளர்களாகச் சேருதல் மற்றும் மருத்துவச் சிகிச்சைக்காகச் செல்லுதல் போன்ற காரணிகளுக்கான வீசா கோரி விண்ணப்பம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் சென்னையில் உள்ள ‘தைபே பொருளாதார மற்றும் கலாச்சார மையம்’ அல்லது சிங்கப்பூரில் உள்ள ‘தைபே பிரதிநிதித்துவ அலுவலகம்’ மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
மேலும், தாய்வானில் உள்ள பிணையாளரின் உத்தரவாதக் கடிதம் மற்றும் அவரது தாய்வான் தேசிய அடையாள அட்டை நகல், விண்ணப்பதாரரின் கடவுச்சீட்டு முதன்மைப் பக்க நகல், குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என்பதற்கான காவல்துறை சான்றிதழ், பயணச் செலவுகளை மேற்கொள்ளப் போதுமான நிதி வசதி உள்ளதற்கான ஆதாரம், தாய்வானில் தங்குவதற்கான முன்பதிவு சான்று மற்றும் திரும்பும் விமான பயணச்சீட்டு ஆகிய ஆவணங்களை உரிய முறையில் சமர்ப்பித்து வீசாவிற்காக விண்ணப்பம் செய்ய முயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.