மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை மற்றும் கப்பல் போக்குவரத்துச் செலவுகள் (Freight Costs) சடுதியாக அதிகரித்துள்ளதன் காரணமாக, லிட்ரோ எரிவாயு நிறுவனம் (Litro Gas) இன்று (ஏப்ரல் 07, 2026) முதல் அமுலுக்கு வரும் வகையில் விலையை அதிகரித்துள்ளது. எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தைக் கருத்திற்கொண்டு, நுகர்வோர் மீது முழுமையான சுமையைத் திணிக்காமல் குறைந்தபட்ச விலை திருத்தத்தையே மேற்கொண்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எடையுள்ள சிலிண்டரின் விலை 775 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை அதிகரிப்பையடுத்து, கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,765 ரூபாவாகும். இதற்கு முன்னதாக இதன் விலை 3,990 ரூபாவாகக் காணப்பட்டது. இதேவேளை, 5 கிலோ கிராம் நிறையுடைய சிறிய சிலிண்டரின் விலை 308 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 1,910 ரூபாவாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், 2.3 கிலோ கிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 140 ரூபாவினால் உயர்த்தப்பட்டு, அதன் புதிய விலை 890 ரூபாவாகும்.
மத்திய கிழக்கு மோதலால் ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) மூடப்பட்டமை மற்றும் சர்வதேச எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகளே இந்தத் திடீர் விலை உயர்விற்கு முக்கிய காரணங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதேவேளை, லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனமும் தனது 12.5 கிலோ சிலிண்டரின் விலையை 1,070 ரூபாவினால் அதிகரித்து, அதன் புதிய விலையை 5,700 ரூபாவாக அறிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தில் இந்த விலை உயர்வு பொதுமக்களின் குடும்பப் பொருளாதாரத்தில் மேலதிக சுமையை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
விலை உயர்விற்கு மத்தியிலும், ஏப்ரல் மாத பண்டிகைக் காலத்திற்காக 38,000 மெட்ரிக் தொன் எரிவாயு மாலைத்தீவு அருகே கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக (Floating Storage) லிட்ரோ நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதனால் இம்மாதம் முழுவதும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் மே மாதத்திற்கான மேலதிக இருப்புக்களும் தற்போது கப்பல்கள் மூலம் நாட்டை நோக்கி வந்துகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எரிவாயு தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.