வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவால் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில், யாழ்ப்பாணம், ஆரியகுளத்தில் பொதுமக்களின் சமய உரிமையை மீறும் வகையில் செயற்படும் அதிகாரம் மாநகர சபைக்கு கிடையாது என்று வடக்கு ஆளுநரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், யாழ். மாநகர முதல்வரின் ஏற்பாட்டில் தனியார் நிதிப் பங்களிப்புடன் ஆரியகுளம் அழகுபடுத்தப்பட்டு, பொழுதுபோக்கு திடலாக பொதுமக்களின் பாவனைக்குத் திறந்து விடப்பட்டிருந்தது.
ஆரியகுள புனரமைப்புப் பணிகளின் போது, மதச் சின்னங்களை நிறுவுவதில் இழுபறி நிலை தோன்றியிருந்த நிலையில், எந்தவொரு மத அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான கட்டமைப்பெதனையும் அமைப்பதில்லை என்று மாநகர சபையில் தீர்மானம் இயற்றப்பட்டிருந்தது.
எனினும், அரசியலமைப்பின் படி மத அனுட்டானங்களைத் தடுக்கும் அதிகாரம் சபைக்கு இல்லை என்று சுட்டிக் காட்டியிருக்கும் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, ஆரியகுளம் மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்டது தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உரித்து ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும் மாநகர ஆணையாளரைப் பணித்திருக்கிறார்.
இதேவேளை, சமயத்தைப் பின்பற்றும் உரிமை தொடர்பில் மாநகர சபை உறுப்பினர்களுக்கு மேலதிக விளக்கங்கள் தேவைப்படின் தன்னைச் சந்திப்பதற்கு ஆலோசனை வழங்குமாறும் அந்தக் கடிதத்தில் ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார்.
#SriLankaNews
Leave a comment