எச்சரிக்கை: அதிக வெப்பத்துடன் பிற்பகலில் மழையும்! வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

world 1

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் ஒருபுறம் கடும் வெப்பமும், மறுபுறம் பிற்பகல் வேளைகளில் மழையும் என இருவேறுபட்ட வானிலை மாற்றங்கள் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. குறிப்பாகப் பல மாவட்டங்களில் வெப்பக் குறியீடு “அவதான நிலை” (Caution Level) வரை உயரும் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கொழும்பு, கம்பஹா, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் பகல் வேளையில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படும். மனித உடலால் உணரப்படும் இந்த வெப்பக் குறியீடு, ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலையை எட்டும் என்பதால், போதுமான அளவு தண்ணீர் அருந்துதல் மற்றும் தேவையற்ற முறையில் வெயிலில் நடமாடுவதைத் தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்பமான சூழலுக்கு மத்தியிலும், வளிமண்டலக் கீழடுக்குத் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இதன்படி மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் பரவலாக மழை பெய்யும்.

பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான பாதுகாப்பு நடைமுறைகளை அமுல்படுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

 

Exit mobile version