தனுஷ்கோடி கடல் பகுதியில் கடலுக்குள் காற்றாலை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
தனுஷ்கோடி கடல் பகுதியில் காற்றாலை அமைய உள்ள இடத்தை மத்திய எரிசக்தி, ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை மந்திரி பகவன்கூபா ஆய்வு செய்தார்.
தற்போது இத்திட்டத்துக்கான இடமாக கம்பிப்பாடுக்கும்-அரிச்சல்முனைக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் காற்றாலைகள் அமைய இருக்கின்றன.
இதுபற்றி எரிசக்தி துறை அதிகாரி கூறியதாவது:-
தனுஷ்கோடியில் தென்கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 5 இடங்களில் சுமார் 150 மீட்டர் உயரத்தில் ரூ.300 கோடி நிதியில் காற்றாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
டென்மார்க் நாட்டுடன் ஒப்பந்தம் செய்து காற்றாலைகள் அமைக்கிறோம். விரைவில் டென்மார்க் அதிகாரிகள் குழுவினர் ஆய்வுக்கு வர உள்ளனர்.
இதில் கிடைக்கும் மின்சார உற்பத்தியை பொறுத்து வருங்காலத்தில் கூடுதலாக கடலுக்குள் காற்றாலைகள் அமைக்கப்படும்.
தனுஷ்கோடி கடல் பகுதியில் இரண்டு விதமான மின்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ஒன்று கடலுக்குள் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது, மற்றொன்று சோலார் (சூரியஒளி) மின்சார உற்பத்தி ஆகும்.
இங்கிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ராமேசுவரம் தீவு பகுதிக்கு முழுமையாக மட்டுமே பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் மாசு இல்லாத மின்உற்பத்தி தீவாக ராமேசுவரத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டு இருக்கிறது என்று கூறினார்.
#dhanushkodi #India
Leave a comment