மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

articles2FVR2hd2cLIcHfFF66K3BB

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச் செல்லத் தயாரில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அவர் முன்வைத்த பிரதான கோரிக்கைகள் வருமாறு:

தோட்டத் தொழிலாளர்கள் தற்போதைய சூழலில் நிர்க்கதியாகியுள்ளனர். அவர்களுக்குத் தலா 7 பேர்ச் காணியை வழங்கி, நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக 5,000 ஏக்கர் காணிகளை ஒதுக்கினால் போதுமானது. இதன் மூலம் பெருந்தோட்டத் துறைக்கு எந்த நட்டமும் ஏற்படப்போவதில்லை. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, தோட்டக் கம்பெனிகளுடன் கலந்தாலோசித்து, தொழிலாளர்களின் காணி மற்றும் சம்பளப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து எந்தவொரு உறுதியான வாக்குறுதியும் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். எனினும், ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் பலர் தொழிலாளர்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தது வரவேற்புக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“எங்கள் காலத்தில் செய்ய முடியாததை உங்கள் காலத்திலாவது செய்து கொடுங்கள்” என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த ராதாகிருஷ்ணன் எம்.பி., மலையக சமூகம் இனிமேலும் ஒதுக்கப்பட்ட சமூகமாக வாழ முடியாது எனவும், அவர்கள் இந்த நாட்டின் பிரஜைகளாக முழு உரிமையுடன் வாழ வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும், இலங்கைக்கு இக்கட்டான நேரங்களில் உதவி வழங்கும் இந்திய அரசாங்கத்திற்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

 

 

Exit mobile version