இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 16) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுத் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேற்கு, சபரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாகச் சபரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவு ஓரளவு கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களின் கடலோரப் பகுதிகளிலும், புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாகச் சீரான வானிலை நிலவும். எனினும், அதிகாலை வேளைகளில் மத்திய, சபரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் மூடுபனி நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குப் பொதுமக்கள் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வுத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.