அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்துவதற்கும், அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதற்கும் ஜனநாயகக் கட்சியினர் கொண்டு வந்த தீர்மானத்தைக் குடியரசுக் கட்சித் தலைமயிலான செனட் சபை புதன்கிழமை (ஏப்ரல் 15) நிராகரித்தது. அதிபரின் போர்க்காலத் தலைமை மீது நம்பிக்கை வைப்பதாகத் தெரிவித்துள்ள குடியரசுக் கட்சியினர், காங்கிரஸின் அங்கீகாரம் இன்றிப் படைகளைத் திரும்பப் பெறக் கோரும் முயற்சியைத் தள்ளுபடி செய்தனர்.
1973-ஆம் ஆண்டின் போர் அதிகாரச் சட்டத்தின்படி (War Powers Act), ஒரு போர் தொடங்கி 60 நாட்களுக்குள் அதற்கு நாடாளுமன்றத்தின் (Congress) அங்கீகாரம் பெறப்பட வேண்டும். இந்தக் காலக்கெடு இந்த மாத இறுதியில் முடிவடையும் நிலையில், அதன் பிறகு போரைத் தொடர்வதற்கு ஜனாதிபதி அதிகாரபூர்வ அனுமதியைக் கோர வேண்டும். இந்தச் சட்டம் மேலும் 30 நாட்கள் கால அவகாசம் வழங்க வழிவகை செய்தாலும், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தெளிவான திட்டத்தை வெள்ளை மாளிகை விரைவில் முன்வைக்க வேண்டும் எனச் சட்டமியற்றுபவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஜனநாயகக் கட்சியின் தீர்மானத்தை எதிர்த்த போதிலும், லிசா முர்கோவ்ஸ்கி மற்றும் சூசன் காலின்ஸ் போன்ற முக்கிய குடியரசுக் கட்சி செனட்டர்கள், அதிபரின் அதிகாரம் வரம்பற்றது அல்ல எனச் சுட்டிக்காட்டியுள்ளனர். 60 நாள் காலக்கெடுவிற்குப் பிறகு போரைத் தொடர்வது மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். “இதை எப்படி முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்து நிர்வாகத்திற்கு ஒரு திட்டம் தேவை” எனச் செனட் பெரும்பான்மைத் தலைவர் ஜான் தூன் தெரிவித்துள்ளார்.
“டிரம்பின் பேரழிவுப் போர்” காரணமாக உலகளவில் எரிவாயு விலை உயர்ந்து வருவதாகவும், இது அமெரிக்க மக்களுக்குப் பெரும் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவதாகவும் செனட் சிறுபான்மைத் தலைவர் சக் ஷுமர் குற்றம் சாட்டியுள்ளார். போரில் தனது இரு கால்களையும் இழந்த செனட்டர் டாமி டக்வொர்த், “நமது துருப்புக்கள் தியாகங்களைச் செய்து வரும் நிலையில், நாடாளுமன்றம் தனது கடமையைச் செய்யத் தவறுவது முறையற்றது” எனத் தெரிவித்தார். போர் சட்டவிரோதமானது மற்றும் தேவையற்றது எனக் கூறும் ஜனநாயகக் கட்சியினர், வாக்கெடுப்புகளைத் தொடர்ந்து முன்னெடுக்கப்போவதாகச் சூளுரைத்துள்ளனர்.