அரசாங்கம் அத்தியாவசிய கல்விக்காக நூற்றுக்கு ஆறு சதவீதம் (6%) நிதி ஒதுக்குவதாகத் தெரிவித்து, அதனை இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யாமல் மக்களை ஏமாற்றுகின்றது என கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
மட்டக்களப்பு பேருந்து தரிப்பு நிலையத்தில், ‘பாடசாலைகள் மூடப்படுகிறது, பாட புத்தகங்கள் இல்லை, மாணவர்கள் கல்வியை விட்டு வெளியேற்றம், சீர்திருத்தத்தை தோற்கடிப்போம்’ எனும் தொனிப் பொருளில், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் தலைமையில் இன்று (நவம்பர் 14) கையொழுத்துப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் மற்றும் எச்சரிக்கைகள்:
“அராசாங்கம் அத்தியாவசிய கல்விக்காக நூற்றுக்கு ஆறு சதவீதம் ஒதுக்குவதாக தெரிவித்து அதனை இன்று வரை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யாமல் மக்களை ஏன் ஏமாற்றுகிறது?”
கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில் கிராமப்புறப் பாடசாலைகளை மூடுவது மற்றும் பாடப்புத்தகங்களை இல்லாமல் செய்வதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.
இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக மாணவர் போராட்டம் வெடிக்கும் என கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
“இன்றைய இளைய சமுதாயத்தினர் நாளைய தலைவர்கள். அவர்களின் கல்வித் தேவைக்காக ஒதுக்கப்படும் நிதியை இடை நிறுத்தினால் மாணவர்களின் கல்வி எந்தளவுக்குச் செல்லும் மக்களே சிந்தியுங்கள்,” என அவர்கள் கூறியுள்ளனர்.