இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வை எட்டும் நோக்கில், தமிழ்த் தேசத்தின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் தீர்வுத்திட்ட வரைபை தயாரிக்கும் பணிகளை ‘ஈழத் தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை’ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான விபரங்களைச் சபையின் ஒருங்கிணைப்பாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியற்துறை முதுநிலை விரிவுரையாளருமான கலாநிதி தி. விக்னேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் யாழ். நல்லூரில் நடைபெற்ற விரிவான கலந்துரையாடலின்போது, தற்போதைய அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தினால் முன்மொழியப்படவுள்ள ‘ஏக்ய ராஜ்ய’ (ஒற்றையாட்சி) அரசியல் யாப்பானது தமிழர்களின் அடிப்படை அபிலாஷைகளை முற்றாக நிராகரிப்பதாக அமைந்துள்ளதெனத் தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையில், ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்தவொரு தீர்வையும் நிராகரிப்பதென்றும், 1985 திம்புக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு புதிய வரைபை உருவாக்குவதென்றும் ஏகமனதாக இணக்கம் காணப்பட்டுள்ளது.
இந்த அரசியலமைப்புச் செயன்முறையை முன்னெடுப்பதற்காகத் துறைசார் நிபுணர்கள், குடிசார் அமைப்புகள் மற்றும் சமயத் தலைவர்களை உள்ளடக்கிய ஒரு வழிநடத்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பிரதானமாக இரண்டு பணிகளை முன்னெடுக்கவுள்ளது:
தமிழர் தேசத்திற்கும் சிங்கள தேசத்திற்கும் இடையில் இறைமையை அங்கீகரித்த அடிப்படையிலான ஒரு புதிய சமூக ஒப்பந்த வரைபைத் தயாரித்தல்.
தமிழர் தேசம் தனது சுயநிர்ணய உரிமையை முழுமையாக அனுபவிக்கக்கூடிய விரிவான கூட்டாட்சி முறைமைக்கான தீர்வுத்திட்ட வரைபை உருவாக்குதல்.
இந்தத் தீர்வுத்திட்ட வரைபு தயாரிப்பின்போது 2016-இல் தமிழ் மக்கள் பேரவையினால் வெளியிடப்பட்ட தீர்வுத் திட்டம் மற்றும் சர்வதேச கூட்டாட்சி முறைமைகள் போன்றன கருத்தில் கொள்ளப்படும். முதற்கட்டமாகத் தயாரிக்கப்படும் உத்தேச அறிக்கை, வடக்கு–கிழக்கு தாயகம் மற்றும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் கருத்துக்களுக்காக வெளியிடப்படும். அனைவரதும் பரிந்துரைகளை உள்ளடக்கிய இந்த இறுதித் தீர்வுத்திட்ட வரைபு, அடுத்த மூன்று மாதங்களுக்குள் உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.