உலகளாவிய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், நாட்டின் கல்விச் செயற்பாடுகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துத் தனியார் பாடசாலைகளுக்கும் இந்த விசேட அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நுகர்வைக் குறைத்து, கிடைக்கக்கூடிய வளங்களை வினைத்திறனாகப் பயன்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
புதிய தீர்மானத்தின்படி, அனைத்துப் பாடசாலைகளும் வாரத்திற்கு நான்கு நாட்கள் மாத்திரமே இயங்கும். மறு அறிவித்தல் வரை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகள் பாடசாலை விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விடுமுறை நாட்களில் மாணவர்கள் வீட்டிலிருந்தே சுயகற்றலில் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும் என அதிபர்களுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்களுக்குத் தேவையான கற்றல் வழிகாட்டல்கள் மற்றும் ஒப்படைப்புகளை (Assignments) முன்கூட்டியே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பாடத்திட்டங்களை உரிய காலப்பகுதிக்குள் நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டு, பாடசாலை நேரத்தைப் புறம்பான விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகளுக்காகப் பயன்படுத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. பாடசாலைகளால் அல்லது வெளி நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு கொண்டாட்டத்திற்கும் பாடசாலை கற்றல் நேரத்தை ஒதுக்கக் கூடாது என அமைச்சு வலியுறுத்தியுள்ளது. மேலும், அதிக எரிபொருள் செலவாகும் வாகனப் பேரணிகள் போன்ற நிகழ்வுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டும் எரிபொருள் சிக்கனத்திற்காகவும், பாடசாலை கல்விச் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்வது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள சுற்றுலாக்களையும் ரத்து செய்யுமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் கல்வி நடவடிக்கைகளைச் சீராகக் கொண்டு செல்ல பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனக் கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.