மீண்டும் நாடு முடக்க நிலைக்கு செல்ல வேண்டிய ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு என மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற உடைக்க சந்திப்ப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர்,
நாட்டில் அனைத்து செயற்பாடுகளும் வழமைக்குத் திரும்பியுள்ளன. இந்த நிலையில் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு பெற்றுக்கொள்ளாதவிடத்து மீண்டும் ஒரு முடக்க நிலைக்கு செல்ல வேண்டிய ஆபத்து ஏற்படும்.
யாழ் மாவட்டத்தில் இதுவரை 19 ஆயிரத்து 62 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். 502 கொரோனா இறப்புக்கள் பதிவாகியுள்ளன. 35 குடும்பங்கள் தற்போது சுய தனிமைப்படுத்தலில் உள்ளன.
30 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 9 ஆயிரத்து 839 பேரும், 29 தொடக்கம் 20 வயதுடையவர்களில் 56 ஆயிரம் பேரும், 12 தொடக்கம் 19 வயதுடையவர்களில் 57 ஆயிரத்து 265 பேரும் தடுப்பூசியின் முதலாவது டோசை பெற்றுள்ளனர்.
பூஸ்டர் தடுப்பூசியை 88 ஆயிரத்து 800 பேர் பெற்றுள்ளனர். குறிப்பாக முதலாம், இரண்டாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள், பூஸ்டர் தடுப்பூசியை கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதுவரை, 30 வீதமானவர்களே பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுள்ளனர். நாட்டில் தற்போது ஒமிக்ரோன் திரிபு பரவிவரும் நிலையில் யாழ் மாவட்டத்திலும் அது பரவுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. எனவே மக்கள் கண்டிப்பாக பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது அவசியம். எதிர்வரும் 31 ஆம் திகதி முதல், ‘பூஸ்டர் தடுப்பூசி வாரம்’ பிரகடனப்படுத்தப்படவுள்ளது.
நாட்டில், பாடசாலை மற்றும் போக்குவரத்து உட்பட அனைத்து செயற்பாடுகளும் வழமைக்குத் திரும்பியுள்ளன. இந்த நிலையில் மக்கள் அனைவரும் ஏற்படவிருக்கும் ஆபத்தை தவிர்த்துக்கொள்ள பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது அவசியமாகும் – என்றார்.
#SriLankaNews
Leave a comment