ஹற்றன் நகரில் சினிமாப் பாணியில் 6 கோடி ரூபா பணத்துடன் வானைக் கடத்திய சாரதியை நேற்று விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
ஹற்றன் நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம். இயந்திரத்தில் வைப்பில் இடுவதற்காக கண்டியில் இருந்து தனியார் நிறுவனம் ஒன்றால் கொண்டு வரப்பட்ட பணமே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தனியார் நிறுவனத்தின் அதிகாரி, பாதுகாப்பு அதிகாரி மற்றும் சாரதி ஆகியோர் ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை வைப்பிலிட வந்துள்ளனர்.
அந்தவேளை அதிகாரியும் பாதுகாப்பு ஊழியரும் வானிலிருந்து இறங்கியவுடன் சாரதி வானை எடுத்துக் கொண்டு பணத்துடன் தப்பித்துள்ளார்.
தலவாக்கலை– லிந்துலை வழியாக அம்பேவல பகுதியில் வான் செல்லுகின்றமையை தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்து பொலிஸார் மற்றும் அதிரடிப் படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப் படையினர் வானை வழிமறித்து சாரதியை கைது செய்துள்ளனர். அத்துடன் குறித்த பணத் தொகைகைகயும் வானையும் கெப்பட்டிப்பொல பொலிஸ் நிலையத்தில் வைத்து ஹற்றன் பொலிஸ் நிலையத்துக்கு கையளித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரான சாரதியையும் பணத் தொகையையும் ஹற்றன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது என நுவரெலியா விசேட அதிகாரப் படையினர் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews