பங்களாதேஷின் ராஜ்ஜாரி (Rajbari) மாவட்டத்தில் உள்ள தௌலத்டியா (Daulatdia) படகுத் துறையில் நேற்று (மார்ச் 25, 2026) இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. குஷ்டியா மாவட்டத்திலிருந்து தலைநகர் டாக்காவை நோக்கி சுமார் 40 முதல் 50 பயணிகளுடன் பயணித்த குறித்த பேருந்து, ஆற்றுக்கடவைக்காகப் படகில் ஏற முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து பத்மா (Padma) ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. மழையுடனான சீரற்ற காலநிலை மற்றும் ஆற்றில் நிலவிய கடும் நீரோட்டம் காரணமாக மீட்புப் பணிகள் சவாலானதாக அமைந்தன.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், கடற்படையினர் மற்றும் சுழியோடிகள் இணைந்து சுமார் 30 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த பேருந்தை ஆறு மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு ‘ஹம்சா’ (Hamza) என்ற மீட்புக் கப்பலின் உதவியுடன் மீட்டனர். பேருந்திற்குள்ளிருந்து மாத்திரம் 22 சடலங்கள் மீட்கப்பட்டதுடன், சிகிச்சையளிக்கப்பட்டு வந்த இருவர் உயிரிழந்ததை அடுத்து மொத்த உயிரிழப்பு 24 ஆக பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் 11 பெண்கள், 5 சிறுவர்கள் மற்றும் 6 ஆண்கள் அடங்குவதாகத் தீயணைப்பு சேவை அதிகாரி தல்ஹா பின் ஜாசிம் (Talha Bin Zasim) உறுதிப்படுத்தியுள்ளார்.
பேருந்து படகில் ஏறச் சென்ற போது, மற்றொரு சிறிய படகு மோதியதால் ஏற்பட்ட அதிர்விலேயே ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்தின் போது 11 பயணிகள் நீந்தித் தப்பிய போதிலும், இன்னும் பலர் காணாமல் போயுள்ளதால் தேடுதல் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தத் துயரச் சம்பவம் தொடர்பில் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான் (Tarique Rahman) தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

