புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர் எனக் கூறப்படுகின்ற நிலையில், யாருடன் போரிடப்போகின்றீர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுடனா, இந்தியாவுடனா அல்லது தமிழர்களுடனா போர் புரியப் போகிறீர்கள் எனவும், நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தவா இந்த நகர்வு எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் ஆற்றிய உரையில்;
பொருட்களின் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் மேலும் உயரும் என எதிர்வு கூறப்படுகின்றது.
விலை உயர்வைத் தடுப்பதற்கான வல்லமை அரசிடம் இல்லை. நாட்டின் நிலை இவ்வாறு இருக்கையில் இராணுவத்துக்கு பலகோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு வறுமையில் சிக்கித்தவிக்கையில் எதற்கு இராணுவத்துக்கு அதிக நிதி? இராணுவ ஆட்சியை ஏற்படுத்தவா இவ்வாறு அதிக நிதி ஒதுக்கப்படுகின்றது என்ற சந்தேகம் எழுந்துள்ளது என அவர் தெரிவித்தார்