இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 7 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று (20) யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போதே இலங்கை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மீனவர்களிடமிருந்து அவர்கள் பயன்படுத்திய இரண்டு விசைப்படகுகள் மற்றும் பெருமளவிலான மீன்பிடி உபகரணங்கள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று (21) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரணை செய்த நீதவான், அவர்களைப் பிப்ரவரி 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில், இலங்கை கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

