செய்திகள்
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கைக் குழுவின் பேச்சு ஆரம்பம்!
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கைக் குழு பேச்சை ஆரம்பித்துள்ளது.
நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர், வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை நேற்று சந்தித்தனர்.
ஒரு நிலையான தீர்வை அடைவதில் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற சர்வதேச நாணய நிதியம் சாதகமாகவுள்ளது என இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நிலைமையைத் தணிக்க நிதியமைச்சர் ஏற்கனவே எடுத்துள்ள நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியதாகவம் அறியமுடிகிறது.
மேலும், இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி பற்றிய கலந்துரையாடல்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவிருந்த குறித்த கலந்துரையாடலுக்காக நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் நேற்றுமுன்தினம் வொஷிங்டன் நோக்கிப் பயணமாகி இருந்தனர்.
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு பயணமாகினர்.
இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் நேற்று ஆரம்பமானது.
இதில் சர்வதேச நாணய நிதியம், 3 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாக வழங்கும் என எதிர்ப்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க முன்னராக நம்பிக்கை வெளியிட்டிருந்த நிலையில், நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பிரகாரம், இலங்கையுடன் இணைந்து பணியாற்ற சர்வதேச நாணய நிதியம் சாதகமாகவுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login