கொரோனாவால் உலகம் முழுவதும் 10 கோடி பேர் வறுமையில் வாடுவதாக, ஐ.நா. சபை தகவல் வெளியிட்டுள்ளது.
பெருந்தொற்று நோயான கொரோனாவால் வளர்ந்து வரும் நாடுகள் பலவும் பின்தங்கி உள்ளன.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக இன்னும் உலக நாடுகள் போராடிவரும் நிலையில், அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் சர்வதேச நிதியம் நடாத்திய நிகழ்வொன்றில், ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பங்கேற்று உரையாற்றினார்.
இதன்போது அவர், ‘கொரோனா வைரஸ் பெருந்தொற்று 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வறுமையில் தள்ளிவிட்டது. 400 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு சமூக ஆதரவு குறைவாக உள்ளது அல்லது இல்லை. சுகாதார பராமரிப்பு இல்லை. அவசரமாக தேவைப்படும்போது வருமான பாதுகாப்பு இல்லை’ எனக் குறிப்பிட்டார்.
மேலும், வளர்ந்து வரும் நாடுகள் பலவும் பின்தங்கி உள்ளன எனவும், வலுவான பொருளாதார நாடுகள் மீட்புக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28 சதவீத அளவுக்கு மீட்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ள எனவும் குறிப்பிட்ட அவர், ஆனால் குறைவான வளர்ச்சி அடைந்த நாடுகள், சராசரியாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.8 சதவீதம்தான் முதலீட்டுக்காக ஒதுக்க முடியும் எனவும் கூறினார்.
Leave a comment