உலகப் புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் தினத்தை (Neglected Tropical Diseases Day) முன்னிட்டு, Strike Out Snakebite அமைப்பு வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கை, பாம்புக்கடி மரணங்கள் குறித்த திடுக்கிடும் உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.38 இலட்சம் பேர் பாம்புக்கடியால் உயிரிழக்கின்றனர். உலகளாவிய உயிரிழப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை (சுமார் 50%) இந்தியாவிலேயே நிகழ்கின்றன.
சராசரியாக உலகில் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒருவர் பாம்புக்கடியால் மரணமடைகிறார்.
பாம்புக்கடி என்பது ஒரு ‘சமூக சமத்துவமின்மையின் அடையாளம்’ என்று இந்த ஆய்வு வர்ணிக்கிறது. உயிர் காக்கும் விஷ எதிர்ப்பு மருந்துகளின் (Anti-venom) அதிக விலை, மருந்துத் தட்டுப்பாடு மற்றும் சிகிச்சைக்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம் போன்ற காரணங்களால், ஏழை மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
பாம்புக்கடி அபாயத்தைக் குறைக்க எளிய வழிமுறைகளை அந்த அமைப்பு பரிந்துரைத்துள்ளது. காடுகளை ஒட்டிய அல்லது விவசாய நிலங்களில் நடக்கும்போது பாதுகாப்பான ஆடைகள் மற்றும் உறுதியான காலணிகளை (Boots) அணிய வேண்டும்.
தரையில் படுப்பதைத் தவிர்த்து, நன்கு கட்டப்பட்ட கொசு வலைகளின் கீழ் உறங்க வேண்டும். இரவு நேரங்களில் வெளியே செல்லும்போது கண்டிப்பாக மின்விளக்கை (Torch light) பயன்படுத்த வேண்டும்.
பாம்புகள் பதுங்கியிருக்க வாய்ப்புள்ள புதர்கள் மற்றும் இடுக்குகளைத் தவிர்க்க வேண்டும்.