கணினி மற்றும் இணையம் சார்ந்த குற்றங்களை (Cyber Crimes) முறியடிப்பதற்காக விசேட பொலிஸ் பிரிவொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நாளொன்றுக்குச் சராசரியாக 23 முதல் 25 வரையிலான சைபர் குற்றங்கள் பதிவாகி வருகின்றன. இது முன்னரை விடப் பாரிய உயர்வு என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதிகரித்து வரும் இக்குற்றங்களை விசாரணை செய்வதற்குத் தற்போதைய பொலிஸ் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி, புதிய தொழில்நுட்பம் மற்றும் விசேட அறிவு கொண்ட அதிகாரிகளைக் கொண்ட பிரிவாக இதனை உருவாக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொலிஸ் சேவையை மிகவும் வினைத்திறனான மற்றும் ஊழலற்ற திணைக்களமாக மாற்றுவதே தற்போதைய அரசாங்கத்தின் இலக்காகும்.
திறமையான அதிகாரிகளுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் பதவி உயர்வுகளை வழங்குவதற்கும், அதேநேரம் பொதுமக்களுக்குப் பாதகமாகத் தவறிழைக்கும் அதிகாரிகளைச் சேவையிலிருந்து நீக்குவதற்குமான முறையான பொறிமுறையொன்று தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று (06) பொல்பிட்டிய பொலிஸ் நிலையத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

