கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகர் பகுதியில் நேற்று (26) இடம்பெற்ற ரயில் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி, ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சபாபதி (82 வயது) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ‘யாழ்ராணி’ ரயிலுடன், உதயநகர் பகுதியிலுள்ள ரயில் கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார், முதியவரின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விபத்து நடந்த பகுதியில் போதிய பாதுகாப்பு சமிக்ஞைகள் இருந்ததா என்பது குறித்தும் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
ரயில் கடவைகளைக் கடக்கும்போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் மீண்டும் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.