தரையிறக்கும் ‘கியர்’ பகுதியில் சிக்குண்ட ஆப்கானியர் சடலம்!
- விமானம் திசை திருப்பப்பட்டது.
- தலிபான் சார்புப் பதிவுகளுக்கு முகநூல் நிர்வாகம் தடை!
காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அமெரிக்க மீட்பு விமானம் ஒன்றின் கீழே – தரையிறக்கும் கியர் (landing gear) பகுதியில் – சடலம் ஒன்று சிக்குண்டதால் அது அவசரமாக அயல் நாடு ஒன்றில் தரையிறக்கப்பட்டது. அமெரிக்க ஊடகங்கள் சில இத் தகவலை வெளியிட்டிருக்கின்றன.
‘கியரை’ இயக்க முடியாத நிலை ஏற்படலாம் என்ற அச்சத்தால் அது மூன்றாவது நாடு ஒன்றுக்கு
திசை திருப்பப்பட்டு அங்கு தரையிறக்கப் பட்டது என்ற தகவலை “வோஷிங்டன் போஸ்ட்” உறுதிப்படுத்தி உள்ளது. ஆனால் விமானத்தில் சடலம் சிக்குண் டமை எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்ற தகவல் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.
அமெரிக்க இராணுவத்தின் மிகப் பெரிய சி17 ரக (C-17 transport aircraft) போக்குவரத்து விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது. அதே விமானத்தில் தொங்கிக்கொண்டு பயணித்தவர்கள் சிலர் விமானம் வானத்தில் கிளம்பிப் பறந்து கொண்டிருந்த சமயம் தரையில் வீழ்கின்ற காட்சிகள் ஏற்கனவே வெளியாகி
இருந்தன.
அவ்வாறு விமானத்தின் கீழ் பகுதியில் ஏறி ஒளிந்துகொண்டு பயணித்த ஒருவரது சிதைந்த உடல் பாகங்களே சக்கரங்களது ‘கியர்’ பகுதியில் காணப்பட்டன என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தப்பியோட முயற்சிக்கின்ற ஆப்கானியர்களால் காபூல் விமான நிலையத்தில் கடந்த மூன்று தினங்களாகப் பெரும் குழப்பம் நிலவி வருவது தெரிந்ததே.
இதேவேளை ஆப்கானிஸ்தானின் முன்னாள் அரசுப் படைகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையானவர்கள் விமானங்கள், ஹெலிக்கொப்ரர்கள் மூலம் அண்டை நாடுகளில் தரையிறங்கி உள்ளனர். நூற்றுக்கணக்கான ஆப்கான் படையினர் 22 விமானங்கள், 24 ஹெலிக்கொப்ரர்கள் மூலம் தனது நாட்டு எல்லைக்குள் பிரவேசித்துள்ளனர் என்று உஸ்பெகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. அவ்வாறு படையினருடன் சென்ற ஆப்கான் விமானம் ஒன்றை உஸ்பெகிஸ்தான் நாட்டு விமானம் ஒன்று வழிமறிக்க முற்பட்ட சமயம் அந்த விமானம் விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொறுங்கியுள்ளது.
தலிபான் அமைப்புக்குச் சார்பான பதிவுகள் தடைசெய்யப்படும் என்பதை முகநூல் நிர்வாகம் மீண்டும் நினைவுபடுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து முகநூலில் தலிபானின் பிரசாரப்பதிவுகளும் அவர்களுக்கு ஆதரவான இடுகைகளும் மிக வேகமாக அதிகரித்துள்ளன என்று கூறப்படுகிறது.
தலிபான் அமைப்பு ஏற்கனவே தனது பரப்புரைகளுக்கு சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்திவந்துள்ளது.
தலிபான் இயக்கம் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு. திடீரென அது ஆட்சி அதிகாரத்துக்கு வந்திருப்பது டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் பல சவால்களை ஏற்படுத்தி உள்ளது.
முகநூல் நிறுவனத்தின் ஆப்கானுக்கான நிபுணர்கள், தலிபான்களுடன் தொடர்புடைய பதிவுகளைக் கண்காணித்து நீக்குவர் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.