மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இதுவரை கணினி மென்பொருட்களை (Desktop App) தரவிறக்கம் செய்தால் மட்டுமே சாத்தியமாக இருந்த குரல் மற்றும் காணொளி அழைப்புகளை (Voice & Video Calls), இனி எந்தவிதமான மென்பொருளுமின்றி நேரடியாக இணைய உலாவிகள் (Browsers) வழியாகவே மேற்கொள்ளும் வசதி முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்டோஸ் அல்லது மெக் செயலிகளைப் பயன்படுத்தாத லினக்ஸ் (Linux) போன்ற இயங்குதளப் பயனர்கள் மற்றும் அலுவலகக் கணினிகளைப் பயன்படுத்துவோர் இனி தடையின்றித் தொடர்புகளைப் பேண முடியும்.
பயனர்களின் வசதிக்காகத் தனிநபர் அரட்டைகளின் மேல் பகுதியில் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளுக்கான பிரத்தியேக ஐகன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அலுவலகக் கூட்டங்களுக்குப் பயன் தரும் வகையில் காணொளி அழைப்பின் போது கணினித் திரையைப் பகிரும் (Screen Sharing) வசதியும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பைப் பொறுத்தவரை, அலைபேசி செயலிகளைப் போலவே இந்த இணைய உலாவி அழைப்புகளும் ‘End-to-End Encryption’ முறையில் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதால், பயனர்கள் அச்சமின்றிப் உரையாடல்களை மேற்கொள்ளலாம் என வட்ஸ்அப் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
வட்ஸ்அப் வெப் தளத்தில் உள்நுழைந்து, கெமரா மற்றும் மைக்ரோஃபோன் அனுமதிகளை வழங்குவதன் மூலம் பயனர்கள் இந்த வசதியை உடனடியாகப் பயன்படுத்தத் தொடங்கலாம். தற்போது தனிநபர் அழைப்புகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த அம்சம், விரைவில் 32 பேர் வரை பங்கேற்கக்கூடிய பிரம்மாண்டமான குழு அழைப்புகளுக்கும் (Group Calls) விரிவாக்கப்படவுள்ளது. இது தவிர, தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளைத் தடுத்தல் (Silence Unknown Callers) போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களையும் வட்ஸ்அப் அண்மையில் இணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.