பூமியில் உள்ள பெரும்பாலான நீர், இந்த கிரகம் உருவான ஆரம்பகால கட்டுமானப் பொருட்களிலிருந்தே (Initial Building Blocks) வந்திருக்கலாம் என நாசாவின் புதிய ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு அப்பல்லோ விண்கலங்கள் கொண்டு வந்த நிலவு மண் மாதிரிகளை நவீன தொழில்நுட்பத்துடன் ஆய்வு செய்ததில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
நாசாவின் ஜோன்சன் விண்வெளி மையம் மற்றும் ஹூஸ்டனில் உள்ள நிலவு மற்றும் கிரகங்களுக்கான நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் டோனி கார்கானோ (Tony Gargano) தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது.
நிலவின் மேற்பரப்புத் தூசுகளை ஆய்வு செய்ய ‘திரிபிள் ஒக்சிசன் ஐசோடோப்புகள்’ (Triple Oxygen Isotopes) என்ற புதிய முறையை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர். விண்கற்கள் மோதும் அதீத வெப்பத்திலும் இவை மாறாமல் இருப்பதால், விண்கற்களின் சுவடுகளைத் துல்லியமாகக் கண்டறிய முடிந்தது.
நிலவின் மண்ணில் சுமார் ஒரு சதவீதம் விண்கற்களிலிருந்து வந்த கார்பன் நிறைந்த பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக, நிலவை விட 20 மடங்கு அதிக விண்கற்கள் பூமியைத் தாக்கியிருக்கலாம்.
பூமியில் நில அதிர்வுகள் மற்றும் வானிலை மாற்றங்களால் விண்கற்கள் மோதிய வரலாற்றுச் சுவடுகள் அழிந்துவிட்டன. ஆனால், நிலவில் பில்லியன் கணக்கான ஆண்டுகளாக ஏற்பட்ட மோதல்களின் பதிவுகள் அப்படியே உள்ளன. விண்கற்கள் மூலம் பூமிக்குக் கிடைத்த நீரின் அளவு மிகவும் குறைவு என்பதும், பூமியின் ஆரம்பகால உருவாக்கத்திலேயே நீர் கலந்திருந்தது என்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
விண்கற்கள் மூலம் வந்த நீர் பூமிக்குச் சிறியதாகத் தெரிந்தாலும், நிலவின் துருவப் பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகளுக்கு இதுவே முக்கிய ஆதாரமாகும்.
நாசாவின் வரவிருக்கும் ‘ஆர்டெமிஸ்’ (Artemis) விண்வெளிப் பயணங்களுக்கு இந்த நீர் ஆதாரம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நிலவின் துருவப் பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகளைப் பயன்படுத்துவதன் மூலம் எதிர்கால விண்வெளித் தளம் அமைக்கும் திட்டங்களுக்கு இது வலுசேர்க்கும்.