முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் பெயரில் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் பெறுமதியான வீடு குறித்து, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழு (CIABOC) விசேட விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
கொழும்பு 05, டொரிங்டன் வீதியில் அமைந்துள்ள இந்த வீட்டின் தற்போதைய சந்தைப் பெறுமதி சுமார் 40 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச 2001-ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதியாகப் பதவியேற்கும் வரை தனது குடும்பத்துடன் இந்த வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். அவர் ஜனாதிபதியான பின்னர், இந்த வீடு ஷிரந்தி ராஜபக்சவின் பெயருக்கு மாற்றப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் சமூக ஆர்வலர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த முறைப்பாட்டில், இந்த வீட்டை வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட நிதியின் ஆதாரம் குறித்துக் கடுமையான சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. முறைப்பாடு தொடர்பான முதற்கட்ட உண்மைகளைச் சரிபார்க்க, முறைப்பாட்டாளரிடமிருந்து ஆணைக்குழு ஏற்கனவே வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
விசாரணையின் அடுத்த கட்டமாக, ஷிரந்தி ராஜபக்சவை ஆணைக்குழுவிற்கு அழைத்து அல்லது அவரிடமிருந்து நேரடியாக வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இந்த விவகாரம் ராஜபக்ச குடும்பத்தினர் மீதான நிதி மோசடி குற்றச்சாட்டுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுவதால், அரசியல் வட்டாரங்களில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.