கரையான் புற்றில் கருநாகம் குடியேறுவதுபோலவே
மொட்டுக்கட்சியை தனதாக்கிக்கொண்டார் பஸில்!
“ மொட்டு கட்சியை பஸில் ராஜபக்ச உருவாக்கவில்லை. மாறாக விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் நாட்டு மக்கள் இணைந்து கட்டியெழுப்பிய ‘அரசியல் சக்தி’க்கு, அவர் ‘ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன’ என பெயர் போட்டுக்கொண்டார்.
கட்சியை பதிவு செய்ய மட்டுமே பஸில் அமெரிக்காவில் இருந்து இங்கு வந்தார். அதாவது பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் – கடின உழைப்பால் கரையான் கட்டிய புற்றில், திடீரென கரு நாகம் குடியேறுவதுபோல்தான் மொட்டுக் கட்சி விடயத்திலும் சம்பவம் அரங்கேறியுள்ளது.”
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவர் மொட்டு கட்சியில் போட்டியிட்டிருந்தாலும் தற்போது சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராகவே செயற்பட்டு வருகின்றார் .
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசின் அமைச்சரவையில் இருந்து விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், இவ்விருவரின் கட்சி உறுப்பினர்களும், பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகளும், ஏனைய சில தரப்பினரும் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சமீது சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்துவருகின்றனர். சுமார் ஒரு வாரத்துக்கு மேலாக தாக்குதல்கள் தொடர்கின்றன.
அரச கூட்டணிக்குள் மோதல் ஏற்பட பஸிலே மூல காரணம் எனக்கருதியே பஸில் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்.
விமல், கம்மன்பில ஆகியோர் பஸில் ராஜபக்சவை ‘அசிங்கமான அமெரிக்கர்’ என விமர்சித்து வருகின்றனர். இது அதாவுதீனின் அற்புத விளக்கு போல பஸில் பல புதுமைகளை நிகழ்த்துவார் எனக்கூறிவந்த மொட்டுக் கட்சி உறுப்பினர்களுக்கு இரத்தக்கொதிப்பை அதிகரிக்க செய்துள்ளது. இதனால் பதிலடி தாக்குதலும் பயங்கரமாகவே உள்ளது.
இந்நிலையிலேயே சிறுது கால மௌனத்துக்கு பின்னர் விஜயதாச ராஜபக்சவும் தற்போது களத்துக்கு வந்து – கருத்துகளால் பஸிலை வறுத்தெடுத்துவருகின்றார்.
இந்த அரசை முதலில் கடுமையாக விமர்சித்து ஜனாதிபதியின் கோபத்துக்கு இலக்கானவர்தான் விஜயதாச. இதனையடுத்து மொட்டு கட்சியுடனான உறவை துண்டித்துக்கொண்டார். அவ்வப்போது ஊடக சந்திப்புகளை நடத்தி அரசை தாக்கி பேசுவார். நேற்று கடும் தாக்குதலை நடத்தியுள்ளார் என்றே கூறவேண்டும்.
“ கரையான் புற்றில் குடிபுகுந்துள்ள புடையன் பாம்மை” கட்டாயம் விரட்ட வேண்டும் என குறிப்பிட்டு, பஸில் தரப்புக்கு பலமாகவே அடி கொடுத்துள்ளார்.
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்ததால் மனம் வருந்துகின்றேன் என கவலை வெளியிட்டுள்ள அவர், புதிய அரசமைப்பு விடயத்தில் தமக்கு ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி மீறப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டு, இந்த ஆட்சியின்கீழ் புதிய அரசமைப்பு சாத்தியமில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
18 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டு சர்வாதிகாரியாக மாறியதால்தான் மஹிந்தவுக்கு முன்கூட்டியே வீடு செல்ல வேண்டிவந்தது ,20 ஆவது திருத்தச்சட்டத்தால் இந்த அரசும் இரு வருடங்களில் வீடு சென்றுவிடும் என விஜயதாச ராஜபக்ச ஆருடமும் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல விமல், கம்மன்பில வெளியேற்றம் குறித்து இதுவரை வெளிவராத தகவலொன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
“ அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் உள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கிய உறுதிமொழியின் பிரகாரமே, விமல், கம்மன்பில போன்றவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.” என விஜயதாச விவரித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 2018 இல் நடைபெற்ற உள்ளாட்சிமன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெற்றதையடுத்து பல தரப்பினரும் பஸிலை பாராட்டினர். ஆளும் கட்சிக்குள் பஸில் பல்லவியே ஓங்கி ஒலித்தது.
அதன்பின்னர் 2019 ஜனாதிபதித் தேர்தலிலும் மொட்டு கட்சி வெற்றிநடை போட்டது. அக்கட்சியின் வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ச பெரு வெற்றிபெற்றார். கட்சியை உருவாக்கி குறுகிய காலத்திலேயே ஆட்சியைப் பிடித்த – அரசியலை நன்கு படித்த தந்திரக்காரர் என பஸில் போற்றி புகழப்பட்டார். அவர் ஓர் ‘அரசியல் விலங்கு’ என்றுகூட எதிரணிகளால் வர்ணிக்கப்பட்டார்.
2020 இல் பொதுத்தேர்தலில் கிடைக்கப்பெற்ற பெரும்பான்மை வெற்றியும் – பஸிலை புகழின் உச்சத்துக்கே அழைத்துச்சென்றது.
இப்படி பல அரசியல் சாதனைகளைப்படைத்த அவர், நாடாளுமன்றம் வர வேண்டும், வந்து நிதி அமைச்சு பதவியை பொறுப்பேற்க வேண்டும் என அவரின் சகாக்கள் கருதினர். பஸிலுக்கு ஏழு மூளைகள் உள்ளன, அதாவுதீனின் அற்புள விளக்குபோல அற்புதங்களை செய்யும் ஆளுமைகூட உள்ளது எனவும் பெருமெடுப்பில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.
ஆக – அலாவுதினின் அற்புத விளக்கு – இன்று அசிங்கமான அமெரிக்கர் வரை வந்து நிற்கின்றது.
#SriLankaNews #Artical