தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்கள் இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 17 ஆம் திகதி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் கார் ஒன்றில் இருந்தே குறித்த வைத்தியரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
குறித்த கொலையுடன் சம்பந்தப்பட்ட பிரதான சந்தேகநபர், அவரது மனைவி, குண்டசாலை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் பொறுப்பதிகாரி மற்றும் குண்டசாலை பிரதேச சபையின் சாரதி ஆகியோரே இவ்வாறு முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள், நுவரெலியா காவல்துறையினரின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, நுவரெலியா நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவுகளின் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அதன்படி, சந்தேகநபர்களை கடந்த ஜூன்மாதம் 26 ஆம் திகதி நுவரெலியா நீதிமன்ற நீதவான் முன் முன்னிலைப்படுத்திய பின்னர், இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் உயிரிழந்த பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்டமையாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து உயிரிழந்த பெண்ணின் காதலர் எனும் கூறப்படும் நபரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், யாழ்ப்பாணம் காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.