வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் பௌத்தமயமாக்கலானது தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசிலும் வலுப் பெற்றுவரும் நிலையில் பல போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன.
தமிழ் மக்களின் மத தலங்கள் குறிப்பாக பௌத்தமயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பது இந்த நாட்டின் சாபக்கேடாகும் என்பது தெளிவாக விளங்குகிறது.
நீண்டகாலமாக சிங்கள ஆட்சியாளர்களால் தமிழ்ர்களின் காணி அபகரிப்பு, சைவத் தமிழரின் தளங்களை அழித்தல், நாடுமுழுவதும் இருக்கும் தமிழர் தொல்லியல் சின்னங்களை அழித்தல் மற்றும் உருமாற்றம் செய்தல், இந்துக்களின் கோயில்களின் வழிபாடுகளைத் சட்டத்திற்கு முரணானவகையில் தடுத்தல், ஆலயங்களுக்குச் சொந்தமான நிலங்களை அபகரித்தல் எனும் அத்துமீறல்கள் தொடர்கதையாகவே செல்கின்றது.
ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே சட்டம் எனக்கூறிப் பெரும் பிரச்சாரம் செய்துவந்த அநுர அரசாங்கம் முன்னைய ஆட்சியாளர்கள் செய்த சட்டவிரோதப் பணிகளையே இன்னும் தொடர்ந்து வருகின்றது.
கோட்டாபயவின் ஆட்சியைப் போன்று இந்த அரசும் செயற்படுகின்றது. குறிப்பாக இந்த ஆட்சியாளர்களின் காலத்தில் உகந்தையில் புத்தர்சிலை நிறுவுதல் ஒரு இன மத விரோதச் செயலாகும்.
அத்துடன் நீண்டநாளாக தொடரும் சமய வழிபாட்டுத்தலங்களின் பிரச்சனைகளுக்கும் எந்த தீர்வையும் தராது அடாவடியினைச் செய்து வருகின்றது. திருகோணமலை கன்னியா சிவனாலய வழிபாட்டு முடக்கம், திருக்கோணேச்சர ஆலய காண்டாமணி நிறுவுவதற்கு அனுமதி மறுப்பு, வெடுக்கு நாறியமலையில் வழிபாட்டுக்குத் தடை, குருந்தூர் மலையில் தடையினைமீறிய புத்தவிகாரை, தையிட்டி சட்டவிரோத விகாரைப் பிணக்கைத் தீர்க்காமை என பலநூறு சமயத் தலங்களின் பட்டியல் நீள்கின்றது.
இவ்வாறான நில அபகரிப்பு பௌத்தமயமாக்கலை கண்டித்து திருகோணமலை வாழ் சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் எமது நிலம் எமக்கு வேண்டும் என்ன தொனிப்பொருளில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீதான அடக்குமுறையினைக் கண்டித்து திருகோணமலை சிவன்கோவிலுக்கு முன்பாக திங்கட்கிழமை (02.06.2025) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது “வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்”, “தமிழர் தொல்பொருளை சிதைக்காதே”, “சைவமத வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்துக”, “கோயில் நிலங்களை அபகரிக்காதே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உகந்தை முருகன் ஆலயம் தொடக்கம் வெருகல் கல்லடி மலை நீலி அம்மன் ஆலயம், திருகோணமலை கன்னியா ஆலயம் உட்பட பல சைவ ஆலயங்கள் பௌத்த மயமாக்கப்பட்டு வருகின்றது.
தொல்பொருள் திணைக்களத்தினால் தமிழர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்ற இடங்களில் எல்லாம் பௌத்த விகாரைகள் உருவாக்கப்பட்டு அந்த இடங்கள் பௌத்தமயமாக்கப்படுகின்றன எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.