9 34
இலங்கைசெய்திகள்

தமிழ் தேசிய போராட்டத்துக்கு அயராது உழைத்த கலாநிதி மகேஸ்வரனின் மறைவு

Share

தமிழ் தேசிய போராட்டத்துக்கு அயராது உழைத்த கலாநிதி மகேஸ்வரனின் மறைவு

கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்துக்கு பல்வேறு வழிகளிலும் பிரித்தானியாவில் இருந்து அயராது பாடுபட்டுவந்திருந்த பொறியியலாளர் கலாநிதி மகேஸ்வரன் சதாசிவம் திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த 15.12.2024 அன்று லண்டனில் காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 70. மகேஸ்வரன் தனது ஆரம்ப கல்வியை யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பாடசாலையிலும் மற்றும் அப்போதிருந்த பரமேஸ்வரா கல்லூரியிலும் பயின்று பின்னர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகியவற்றை படித்திருந்தார்.

க.பொ.த உயர்தர பரீட்சையில் மிகவும் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட அவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்துக்கு தெரிவாகியிருந்தார்.

இருந்தபோதிலும், குடும்ப சூழ்நிலை மற்றும் நாட்டில் அப்போது நிலவிய அசாதாரண அரசியல் சூழ்நிலை காரணமாக தனது பொறியியல் படிப்பை மேற்கொள்வதற்கு 1974 ஆம் ஆண்டு அவர் பிரித்தானியாவுக்கு சென்றார்.

லண்டன் மிடில்செஸ் பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த அவர் பின்னர் ஹட்பீல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்பு பொறியியல் துறையில் கலாநிதி படிப்பை பூர்திசெய்தார்.

யாழ்ப்பாணத்தில் பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே அவரின் தந்தை சதாசிவம் வழியில் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு உட்பட பல்வேறு தமிழ் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

பிரித்தானியா வந்த பின்னர் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் தீவிரம் அடைந்த போது பல்வேறு வழிகளிலும் பங்களிப்பு செய்து தேசியத் தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து செயற்பட்டார்.

தனது அரசியல் மற்றும் ராஜதந்திர செயற்பாடுகளின் பொருட்டு அவர் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றபோதும் அதற்கு பின்னரும் அவர் பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது, அவர் கொழும்பில் சிறை செல்லும் நிலையும் ஏற்பட்டிருந்தது.

தனது அரசியல் மற்றும் ராஜதந்திர பணிகளின்பொருட்டு தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் பலருடனும் வெளிநாட்டு ராஜதந்திரிகள் மற்றும் தூதுவராலயங்களுடனும் உயர்மட்ட தொடர்புகளை அவர் பேணி வந்திருந்தார்.

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை அரசியல், பொருளாதார, கல்வி மற்றும் சுகாதார ரீதியாக வலுவூட்டுவதற்கு அவர் பெரிதும் பாடுபட்டுவந்திருந்தார்.

இதன் பொருட்டு அவர் பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்து தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், மருத்துவர்கள், கல்வியாளர்களை தொடர்ச்சியாக சந்தித்து வந்திருந்தார்.

ஏழைகள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பல்வேறு உதவிகளையும் இந்த காலப்பகுதியில் அவர் செய்திருந்தார்.

முள்ளிவாய்க்கால் துரதிஷ்டம் ஏற்பட்டபோதிலும், தமிழ் மக்கள் தமது அரசியல் , ராஜதந்திர, ஜனநாயக செயற்பாடுகளின் மூலம் தமது அரசியல், சமூக, பொருளாதார அபிலாஷைகளை வென்றெடுக்க முடியும் என்ற ஆழமான நம்பிக்கையை அவர் கொண்டிருந்தார்.

ஆனால், தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் மத்தியில் காணப்பட்ட பிளவுகளும் சண்டைகளும் அவரை மனதளவில் பெரிதும் பாதித்திருந்தன.

அதனால், தமிழ் அமைப்புக்கள் மத்தியில் செயற்பாட்டு ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்தும் பொருட்டு அண்மைக்காலத்தில் பல நாடுகளுக்கும் விஜயம் செய்து பல்வேறு சந்திப்புக்களை அவர் மேற்கொண்டிருந்தார்.

அத்துடன், பல நாடுகளினதும் ராஜதந்திரிகளுடன் அவர் இறுதிவரை தொடர்புகளை பேணிவந்திருந்தார்.

கலாநிதி மகேஸ்வரனின் திடீர் மறைவு ஈழ தமிழ் மக்களின் தேசிய விடுதலைப்போராட்டத்துக்கு ஒரு பேரிழப்பாகும்.

அவர் தனது மனைவி (மருத்துவர்), இரண்டு மகள்கள் (மருத்துவர்கள்) மற்றும் மகன் (பொறியியலாளர்) ஆகியோரை விட்டுச்செல்கின்றார்.

அவரின் இறுதி நிகழ்வுகள் 27.12.2024 அன்று காலை 9 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை பிரித்தானியாவின் Harrow Leisure Centre ( Christchurch Ave, Harrow HA3 5BD) இல் நடைபெற்று பிற்பகல் 3 மணிக்கு Hendon Cemetery & Crematorium இல் (Holders Hill Rd, London NW7 1NB) தகனம் செய்யப்படும்.

Share

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...