ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற முன்வர வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (21) முற்பகல் தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியியல் கல்லூரியின் (SLMA) கெடட் அதிகாரிகள் விடுகை அணிவகுப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி, அரசாங்கம், மதத் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படைகள் என அனைத்துத் தரப்பினரும் தமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றினால் மட்டுமே நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியும் என அவர் வலியுறுத்தினார்.
இலங்கை ஒரு காலத்தில் சிறந்த பாரம்பரியத்தையும் வெற்றிகளையும் கொண்டிருந்த போதிலும், கடந்த சில தசாப்தங்களாகப் பல்வேறு துறைகளில் வீழ்ச்சியடைந்துள்ளது. இழந்த அந்தப் பெருமையையும் கௌரவத்தையும் மீண்டும் பெறுவதே தற்போதைய பிரதான இலக்காகும்.
சவால்களை எதிர்கொள்ளும்போது ஒரே நோக்கத்துடனும் உறுதியுடனும் செயற்படுவதன் மூலம், தாய்நாட்டை உலகில் மதிப்புமிக்க ஒரு நாடாக மாற்ற முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
புதிதாக விடுகை பெற்ற இராணுவ அதிகாரிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பாதுகாப்புப் படைகளுக்கு உள்ள முக்கிய பொறுப்பினை நினைவுபடுத்தினார்.