போலி ஏ.ஐ. ட்ரெய்லர்கள்: ஒரு பில்லியன் பார்வையாளர்களைக் கொண்டிருந்த 2 யூடியூப் தளங்களை முடக்கியது கூகுள்!

image 99752a50f1

செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட போலித் திரைப்பட முன்னோட்டக் காட்சிகளை (Fake Trailers) வெளியிட்டு, ரசிகர்களை ஏமாற்றி வந்த இரண்டு பிரம்மாண்ட யூடியூப் சேனல்களை யூடியூப் நிறுவனம் அதிரடியாக முடக்கியுள்ளது.

இந்தியாவைத் தளமாகக் கொண்ட ‘ஸ்கிரீன் கல்ச்சர்’ (Screen Culture) மற்றும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ‘கே.எச் ஸ்டுடியோ’ (KH Studio) ஆகிய 2 யூடியூப் தளங்களுமே அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு தளங்களும் இணைந்து சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களையும், மொத்தமாக ஒரு பில்லியனுக்கும் (100 கோடி) அதிகமான பார்வையாளர்களையும் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தளங்கள் ஏற்கனவே வெளியான திரைப்படங்களின் காட்சிகளுடன், ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி முகங்கள் மற்றும் குரல்களை இணைத்து, வரவிருக்கும் புதிய திரைப்படங்களின் அதிகாரப்பூர்வமான ‘டீசர்’ அல்லது ‘ட்ரெய்லர்’ போல வெளியிட்டு வந்தன. குறிப்பாக ஹொலிவுட்டின் முன்னணித் திரைப்படங்களின் இரண்டாம் பாகங்கள் வருவது போன்ற தோற்றத்தை இவை உருவாக்கின.

இவற்றை உண்மை என நம்பி பல கோடி ரசிகர்கள் ஏமாற்றமடைந்ததைத் தொடர்ந்து, பதிப்புரிமை மீறல் மற்றும் தவறான தகவல் பரப்புதல் ஆகிய விதிகளின் கீழ் இந்தச் சேனல்களை யூடியூப் நிரந்தரமாக நீக்கியுள்ளது. ஏ.ஐ. மூலம் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த யூடியூப் எடுத்து வரும் மிக முக்கியமான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

 

 

Exit mobile version