அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நடைபெறவிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தை திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது.
நாளை நடத்தப்படவிருந்த குறித்த பேச்சுவார்த்தை இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் ஓமானிய வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்புசைடி உறுதிபடுத்தியுள்ளார்.
இஸ்ரேல் – ஈரானுக்கு இடையில் போர்பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானுடன் அணுசக்தி பேச்சுவார்த்தையை மேற்கொள்ள அமெரிக்கா முன்வந்தது.
அதற்கமைய, ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க-ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தைகளின் அடுத்த சுற்று இடம்பெறவிருந்தது.
இருப்பினும், குறித்த சுற்று பேச்சுவார்த்தை தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் இட்டுள்ள பதவில், “இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் ஈரானுக்கு ஒரு ஒப்பந்தம் செய்ய 60 நாள் இறுதி எச்சரிக்கை விடுத்தேன். அவர்கள் அதைச் செய்திருக்க வேண்டும்! இன்று 61ஆவது நாள்.
நான் அவர்களிடம் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னேன், ஆனால் அவர்களால் அதை அணுக முடியவில்லை. இப்போது அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளது” என குறிப்பிட்டிருந்தார்.