வெனிசுலா விவகாரம்: ஐநா பாதுகாப்பு சபை நாளை அவசரக் கூடல் – மதுரோ கைது மற்றும் வான்வழித் தாக்குதல்கள் குறித்து விவாதம்!வெனிசுலாவில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கை மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கைது குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை நாளை (05) அவசரமாகக் கூடவுள்ளது.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை அமெரிக்கா சிறைப்பிடித்தது மற்றும் வெனிசுலாவின் எதிர்கால அரசியல் நிலை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
ஐநா தலைமையகத்தில் உள்ள பாதுகாப்பு சபையின் 15 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் இந்த அவசரக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
அமெரிக்க இராணுவம் வெனிசுலா மீது நடத்திய வான்வழித் தாக்குதல்கள் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 40 வெனிசுலா வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவினால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் தற்போது அமெரிக்காவின் பெருநகரப் பகுதியிலுள்ள ஒரு இரகசிய தடுப்பு மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த இராணுவ நடவடிக்கை சர்வதேச ரீதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் நிலவும் ஸ்திரமற்ற நிலை மற்றும் சர்வதேச சட்ட திட்டங்களை மீறி ஒரு நாட்டின் தலைவரை அமெரிக்கா கைது செய்துள்ள விவகாரம் குறித்து இக்கூட்டத்தில் தீவிரமாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.