துருக்கி – சிரியாவில் கடந்த 5-ந்தேதி ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தால் தரை மட்டமான ஆயிரக்கணக்கான வீடு, கட்டிட இடிபாடுகளில் தொடர்ந்து மீட்கும்பணி நடந்து வருகிறது. இ
கட்டிட இடிபாடுகளில் இருந்து பலியானவர்களின் உடல்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இரு நாடுகளிலும் நில நடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டியது. இதில் துருக்கியில் பலியானோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இடிபாடுகளில் இருந்து உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அதே நேரத்தில் கட்டிட இடிபாடுகளில் இருந்து பலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகிறார்கள். 100 மணி நேரத்துக்கு பிறகு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்புக் குழுவினர் வெளியே கொண்டு வந்தனர்.
குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த நிலையில் துருக்கியில் 128 மணி நேரத்துக்கு பிறகு இடிபாடுகளில் இருந்து 2 மாத பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. துருக்கியில் ஹடாய் நகரில் கட்டிட இடிபாடுகளை அகற்றிய போது ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்ட நிலையில், விரைந்து செயற்பட்ட மீட்புக்குழுவினர் பின்னர் அந்த பச்சிளம் குழந்தையை 128 மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
மீட்கப்பட்ட குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. குழந்தை தற்போது நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 5 நாட்களுக்கு பிறகு இடிபாடுகளில் இருந்து 2 வயது சிறுமி, கர்ப்பிணி பெண், 70 வயது மூதாட்டி ஆகியோரும் உயிருடன் மீட்கப்பட்டனர். காசியான்டெப் மாகாணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இதற்கிடையே துருக்கியில் நில நடுக்க பாதிப்புக்கு மத்தியில் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் திருட்டில் ஈடுபட்ட 48 பேர் கைது செய்யப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#world #turkey
Leave a comment