ஈரான் மீதான தாக்குதல் 6-வது நாளில்: இராணுவ வலிமை சிதைந்துவிட்டதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

23 2

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல் ஆறாவது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானின் ஒட்டுமொத்த இராணுவ வலிமையும் சிதைந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானின் வான்படை மற்றும் வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் முற்றாகத் துடைத்தெறியப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ள அவர், ஈரானியக் கடற்படையின் 24 போர்க்கப்பல்கள் வெறும் மூன்றே நாட்களில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். திட்டமிட்ட காலக்கெடுவுக்கு முன்பாகவே ஈரான் வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாகவும், தற்போது ஈரானியத் தலைமைத்துவம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும், இதற்கான காலம் கடந்துவிட்டதாக ட்ரம்ப் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

ட்ரம்ப்பின் இந்த அதிரடி அறிவிப்புகளை ஈரான் தரப்பு முற்றாக நிராகரித்துள்ளது. ஈரானின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், அமெரிக்காவின் எந்தவொரு தரைவழி ஆக்கிரமிப்பையும் எதிர்கொள்ள ஈரானியப் படைகள் மிகத் தீவிரமாகத் தயார் நிலையில் உள்ளதாக எச்சரித்துள்ளார். “ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்களை எதிர்கொள்ளவும், தேவைப்படின் அவர்களைச் சிறைப்பிடிக்கவும் எமது படைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. ஊழல் நிறைந்த அமெரிக்க அதிகாரிகளுக்குப் பெருத்த அவமானத்தை ஏற்படுத்த ஈரான் தயாராக உள்ளது,” என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் ஆன்மீகத் தலைவர் அலி காமேனியின் மறைவுக்குப் பின்னர், ஈரானின் புதிய தலைமைத்துவத்தை உருவாக்குவதில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்ற ட்ரம்ப்பின் கருத்தை லாரிஜானி கடுமையாகக் கண்டித்துள்ளார். ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும், இது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மோதல் தற்போது வான்வழித் தாக்குதல்களில் இருந்து தரைவழி ஆக்கிரமிப்பு குறித்த எச்சரிக்கைகள் வரை நீண்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இந்த நேரடி மோதல், மத்திய கிழக்கின் புவிசார் அரசியலில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. வான்படை மற்றும் கடற்படை தளங்களை இழந்துள்ள ஈரானின் தற்காப்பு வியூகம், இனி வரும் நாட்களில் எந்த வடிவத்தை எடுக்கப்போகிறது என்பது உலக நாடுகளின் உன்னிப்பான கவனத்தைப் பெற்றுள்ளது. தரைவழி மோதல்கள் ஆரம்பிக்கும் பட்சத்தில், அது பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு மேலும் சவால்களை ஏற்படுத்தும் என அரசியல் மற்றும் இராணுவ வல்லுநர்கள் அஞ்சுகின்றனர்.

 

 

Exit mobile version