பின்னணியில் இந்தியா: CCTV காட்சிகள் வெளியாகியுள்ளதாக தகவல்
கனடாவில் கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் குற்றம் சாட்டியுள்ள விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நபர் கொல்லப்படும் காட்சிகள் CCTV கமெராவில் சிக்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கனேடிய குடிமகன் ஒருவர், கனடா மண்ணில் வைத்தே கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவின் பங்கு இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சீக்கிய பிரிவினைவாத அமைப்பொன்றின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவரே கொல்லப்பட்டவர் ஆவார்.
இந்நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொல்லப்படும் காட்சிகள் CCTV கமெராவில் பதிவாகியுள்ளதாக The Washington Post என்னும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு வாகனங்களில் வந்த ஆறு பேர், முன்கூட்டியே திட்டமிட்டு இந்த குற்றச்செயலை நிறைவேற்றியுள்ளதாகவும், நிஜ்ஜரை நோக்கி 50 துப்பாக்கிக் குண்டுகள் சுடப்பட்டதாகவும், அவற்றில் 34 குண்டுகள் அவரைத் தாக்கியதாகவும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குருத்வாராவிலுள்ள CCTV கமெராவில் பதிவாகியுள்ளதாகவும், 90 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ காட்சிகள் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் The Washington Post தெரிவித்துள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களில் இருவர், சீக்கிய உடை அணிந்து, தாடியுடன் காணப்பட்ட நபர்கள் என, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ள விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
Comments are closed.