வடக்கு பிரதேச நிலைமையை நேரில் ஆராயவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்

25 68469bb92efdd

இலங்கைக்குப் பயணம்மேற்கொள்ளவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்(Volker Türk), வடக்குக்கும் நேரில் வந்து நிலைமைகளை ஆராயவுள்ளார்.

இதன்போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன், மலையக மக்களின் நிலை பற்றியும் இலங்கைப் பயணத்தின் போது அவர் அவதானம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க், எதிர்வரும் 23ஆம் திகதி கொழும்பு வருகின்றார்.

26 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கி இருக்கத் திட்டமிட்டுள்ள அவர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் உள்ளிட்ட அரச தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அவர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களையும் கொழும்பில் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரையும் இந்த விஜயத்தின் போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் எனப் பல தரப்பு கலந்துரையாடலையும் அவர் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலையகச் சிவில் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின்போது, மலையக மக்கள் பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது. அதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நேரில் சென்று, நிலைமைகளை ஆராயவுள்ளதுடன், போரின்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் சந்திக்கவுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதக் கூட்டத் தொடரில் இலங்கை குறித்து வலுவானதொரு தீர்மானம் பிரிட்டன் தலைமையில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version