கனடாவில் இந்திய வம்சாவளியினர் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விவகாரம்: சமீபத்திய தகவல்

OIP 16

கனடாவில், கோவில் ஒன்றின் நிர்வாகியாக இருக்கும் இந்திய வம்சாவளியினர் ஒருவர் வீட்டை நோக்கி காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பினர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட சம்பவம் தொடர்பில் பயனுள்ள தகவல் ஒன்று கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள சர்ரேயில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வசித்துவருகிறார் இந்திய வம்சாவளியினரான சதீஷ் குமார்.

சதீஷ் குமார், லக்‌ஷ்மி நாராயண் கோவிலின் நிர்வாகியாக பொறுப்பு வகித்து வருகிறார். டிசம்பர் மாதம் 27ஆம் திகதி, காலை 8.00 மணியளவில் சிலர் அவரது வீட்டை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்கள்.

சுமார் 14 குண்டுகள் சுடப்பட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என மறுநாள் காலை தகவல் வெளியானது.

எதற்காக சதீஷ் குமார் வீட்டின்மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

இந்நிலையில், வழக்கில் பயனுள்ள தகவல் ஒன்று கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சதீஷ் குமார் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய கும்பல் பயன்படுத்தியது என கருதப்படும் கார் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அந்த காரைக் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ள பொலிசார், பொதுமக்கள் யாராவது அந்த காரை பார்த்திருந்தாலோ, அது குறித்து ஏதாவது தகவல் தெரிந்தாலோ தங்களை அணுகுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

 

Exit mobile version