ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றங்களைத் தணித்து, நிரந்தர அமைதி உடன்படிக்கையை எட்டும் நோக்கில் பாகிஸ்தான் தனது இராஜதந்திர முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தானின் உயர்மட்டத் தூதுக்குழு ஒன்று நேற்று (ஏப்ரல் 15) ஈரானின் தலைநகர் தெஹ்ரானைச் சென்றடைந்தது.
பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் மற்றும் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி ஆகியோர் தலைமையிலான இக்குழுவினர், அமெரிக்காவிடமிருந்து கொண்டுவரப்பட்ட விசேட செய்தியை ஈரானியத் தலைமைக்குத் தெரிவிக்கவுள்ளனர். ஆசிம் முனீரை டொனால்ட் ட்ரம்ப் தனது ‘விருப்பமானவர்’ என்று முன்னர் வர்ணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற முதற்கட்டப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றித் தோல்வியடைந்த நிலையில், இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகளைத் திட்டமிடுவதே இவர்களின் வருகையின் முக்கிய நோக்கமாகும்.
தெஹ்ரானில் ஒரு குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் வேளையில், பாகிஸ்தான் பிரதமர் முகமது ஷெபாஸ் ஷெரீப் சவூதி அரேபியாவின் ஜித்தாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானைச் சந்தித்து, பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து அவர் ஆலோசனை நடத்தவுள்ளார். சவூதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்ளும் இந்த நான்கு நாள் பயணத்தின் மூலம், அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதலுக்கு ஒரு சர்வதேச ஆதரவுடன் கூடிய தீர்வைப் பெற அவர் முயன்று வருகிறார்.
தற்போது நடைமுறையிலுள்ள தற்காலிகப் போர்நிறுத்தம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) முடிவடையவுள்ளது. அதற்கு முன்னதாகவே இஸ்லாமாபாத்தில் இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி, நிரந்தரப் போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்தப் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தைக் கைவிட மறுப்பதும், ஹோர்முஸ் நீரிணை முடக்கமும் முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் பெரும் தடையாக இருந்த நிலையில், புதிய சுற்றில் இவை குறித்து இணக்கம் காணப்படுமா என்பதை உலகம் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது.

