இனியும் நாடு முடங்காது! – சுகாதார அமைச்சர் நம்பிக்கை
நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், எதிர்வரும் காலங்களில் நாட்டை முடக்க வேண்டிய தேவை வராது.
இருப்பினும், எதிர்வரும் வாரங்களை அவதானத்துடன் கடக்க வேண்டும் என பிரான்ஸின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வாங்கும்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் நான்காவது அலை ஜூலை மாதத்திலேயே தொடங்கிவிட்டது. எம்மிடம் தடுப்பூசி இருந்த காரணத்தால் நான்காவது அலையின் பாதிப்பை முடிந்தளவில் தடுக்க முடிந்துள்ளது.நாட்டில், 80 வீதமானோர் ஒரு டோஸையாவது பெற்றுக்கொண்டுள்ளனர்.
56 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசி அடுத்த மாதம் முதல் ஏற்றப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்குப் பணித்துள்ளோம். – என்று தெரிவித்துள்ளார்.
பிரான்ஸின் நிர்வாகத்தின் கீழ் உள்ள தீவுகளில் நான்காவது அலை படுவேகமாகப் பரவி வருகிறது. பிரான்ஸின் உள்ளேயும் இந்த நிலைமை விரைவில் தோன்றலாம் என எச்சரிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் கோடை விடுமுறை முடிவடையும் நிலையில், புதிய கல்வி ஆண்டுக்காகப் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. அதனால் இளவயதினரிடையே டெல்ரா வைரஸ் தீவிரமாகப் பரவ வாய்ப்பு உள்ளது என்று தொற்றுநோயியலாளர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment