சோமாலியாவின் மொகடிஷு நகரில் அமைந்துள்ள ஏடன் அப்துல்லே சர்வதேச விமான நிலையத்தில், செவ்வாய்க்கிழமை காலை ‘ஸ்டார்ஸ்கி ஏவியேஷன்’ (Starsky Aviation) நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்ட போது கட்டுப்பாட்டை இழந்து கடலோரப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. வடக்கு நகரமான கால்காசியோவை (Galkayo) நோக்கி 50 பயணிகள் மற்றும் 5 பணியாளர்களுடன் புறப்பட்ட இந்த விமானம், புறப்பட்ட 15 நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளானது. இதனையடுத்து விமானி சாதுர்யமாகச் செயல்பட்டு விமானத்தைத் தரையிறக்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விமானம் ஓடுபாதையில் தரையிறங்கிய போதிலும், வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் ஓடுபாதையைத் தாண்டி அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் ஆழமற்ற கடற்கரைப் பகுதிக்குள் பாய்ந்தது. விமானத்தின் முன்பகுதி மற்றும் இறக்கைகள் சேதமடைந்த போதிலும், விமானத்திற்குள் நீர் புகுவதற்கு முன்னதாகவே மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டனர். “விமானத்தில் இருந்த 55 பேரும் எவ்விதக் காயங்களுமின்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை” என விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அகமது நூர் நிம்மதியுடன் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த சோமாலிய போக்குவரத்து அமைச்சர் முகமது ஃபரா நூஹ், மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டார். விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதை உறுதிப்படுத்திய அவர், விமானத்திற்கு மட்டுமே பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். “இந்த விபத்துக்கான பின்னணி மற்றும் தொழில்நுட்பக் கோளாறுக்கான காரணம் குறித்து உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு முழுமையான விசாரணை நடத்தப்படும்” என அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
தற்போது விமான நிலையத்தின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்பட்டு, கடலில் சிக்கியுள்ள விமானத்தை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சோமாலியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குனர் அகமது மோலிம் கூறுகையில், “விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றதே விபத்திற்குக் காரணம்” என்றார். நூலிழையில் 55 உயிர்கள் காப்பாற்றப்பட்ட இந்தச் சம்பவம், மொகடிஷு விமான நிலையப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

