ஜப்பானிய பாராளுமன்றத்தில் வினோதப் போராட்டம்: பெண் எம்.பி.க்கள் கழிப்பறை கேட்டு மனு!

251021 Sanae Takaichi rs 9c18b6

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் சனே டக்காயிச்சி (Sanae Takaichi) தலைமையிலான அரசாங்கத்தில், பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குக் கூடுதல் கழிப்பறை வசதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜப்பானிய பாராளுமன்றத்தின் (The Diet) கீழ்சபையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் இன்னும் ஆண்களின் ஆதிக்கக் காலத்திலேயே உள்ளன.

கீழ்சபையின் 73 பெண் உறுப்பினர்களுக்கு, முக்கிய கூட்ட அரங்கு அருகே இரண்டு அறைகள் கொண்ட ஒரேயொரு கழிப்பறை மட்டுமே உள்ளது. இதனால் கூட்டத்தொடர்களுக்கு முன்னதாக பெண் உறுப்பினர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

ஆண்களுக்கு 67 அறைகளுடன் 12 கழிப்பறைகள் உள்ள நிலையில், பெண்களுக்கு 22 அறைகளுடன் 9 வசதிகள் மட்டுமே உள்ளன.

எதிர்க்கட்சி உறுப்பினர் யாசுகோ கோமியாமியா தலைமையில், 58 பெண் உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு நிர்வாகக் குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளது.

1936-ல் கட்டப்பட்ட இந்தப் பாராளுமன்றக் கட்டடம், பெண்கள் வாக்குரிமை பெறுவதற்கு முன்பே கட்டப்பட்டது என்பதால், பெண் பிரதிநிதித்துவத்திற்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கீழ்சபையின் 465 உறுப்பினர்களில் தற்போது 72 பேர் பெண்கள். இது முந்தைய சபையை விட (45 பேர்) அதிகமென்றாலும், இன்னும் சமத்துவத்தை எட்டவில்லை.

உலகப் பொருளாதார மன்றத்தின் பாலின இடைவெளி அறிக்கையில், 148 நாடுகளில் ஜப்பான் 118-வது இடத்தில் உள்ளது.

கடந்த அக்டோபரில் ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே டக்காயிச்சி, பெண்களின் உடல்நலப் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாகப் பேசினாலும், பழமைவாதக் கொள்கைகளைக் கொண்டவர். அவரது 19 பேர் கொண்ட அமைச்சரவையில் இரு பெண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதற்கான குறியீடே இந்தக் கழிப்பறைப் போராட்டம்” என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 

 

Exit mobile version