ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேலின் கடும் வான்வழித் தாக்குதல்: ‘ரோரிங் லயன்’ தீவிரம்

14

ஈரானியத் தலைநகர் தெஹ்ரானை இலக்கு வைத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் மீண்டும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளன. இது இஸ்ரேலினால் முன்னெடுக்கப்படும் ‘ரோரிங் லயன்’ (Operation Roaring Lion) இராணுவ நடவடிக்கையின் ஒரு தீர்க்கமான கட்டமாகக் கருதப்படுகிறது.

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், “இந்த இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து முதன்முறையாக, தெஹ்ரான் நகரின் முக்கியப் பகுதிகளில் அமைந்துள்ள ஈரானிய ஆட்சியின் இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், பின்னர் ஈரானிய அரசாங்க ஊடகங்கள் அதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.

இப்பிராந்தியத்தில் வான்வெளி மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தவும், தெஹ்ரானை நோக்கிய பாதையை ஏற்படுத்தவும் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேலிய விமானப்படை பாரிய அளவிலான தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. இன்று காலை தெஹ்ரானின் பல இடங்களில் சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்கள் பதிவாகியுள்ளதுடன், சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படங்களில் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து அடர்ந்த புகை மூட்டம் எழுவதைக் காணக்கூடியதாக உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த இராணுவ நடவடிக்கையை ‘ஒபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) என அழைப்பதுடன், ஈரானின் ஏவுகணை அமைப்புகள் மற்றும் இராணுவக் கட்டமைப்புகளை அழிப்பதே இதன் நோக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல்களுடன் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர்ச் சூழல் மிகக் கடுமையான நிலையை எட்டியுள்ளது. இதற்குப் பதிலடியாகப் பாரிய தாக்குதலை முன்னெடுக்கப் போவதாக ஈரான் எச்சரித்துள்ளது.

 

 

Exit mobile version