ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெற்றிபெறாது என்றும், ஈரானைப் பணியவைக்க நினைக்கும் அவர்களின் கனவு அவர்களுடனேயே கல்லறைக்குச் செல்லும் என்றும் ஈரானிய இராணுவத்தின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அமீர் ஹடாமி (Amir Hatami) அதிரடியாக எச்சரித்துள்ளார். சமீபத்தில் தாக்குதலுக்கு உள்ளான ‘டெனா’ (Dena) போர்க்கப்பலின் மாலுமிகளின் தியாகத்தை நினைவுகூரும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் பலவீனமடையும் என எதிரிகள் தவறாகக் கணக்கிட்டதாக ஹடாமி சுட்டிக்காட்டினார். ஆனால், கமேனியின் மறைவிற்குப் பிந்தைய 40 நாட்களுக்கும் மேலாக, மில்லியன் கணக்கான ஈரானிய மக்கள் முன்னெப்போதையும் விட அதிக ஒற்றுமையுடன் தேசியக் கொடியை ஏந்தி ஆக்கிரமிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்து வருவதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். “இந்தக் கொடி ஒருபோதும் கீழே விழாது” என அவர் மேலும் வலியுறுத்தினார்.
அமெரிக்கா ஒரு சிறிய அளவிலான தரைவழி இராணுவ ஊடுருவலை முயற்சித்தால் கூட, ஈரானிய மண்ணில் ஒரு எதிரி சிப்பாய் கூட உயிருடன் எஞ்சியிருக்க மாட்டார் என இராணுவத் தளபதிகளுக்குத் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஹடாமி எச்சரித்தார். வொஷிங்டன் அல்லது டெல் அவிவ் எடுக்கும் எந்தவொரு தவறான முடிவும் ஈரானின் மிகக் கடுமையான எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்றும், புனிதமான தாயகத்தைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து தற்காப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
பிப்ரவரி இறுதியில் தொடங்கிய இந்த அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள், வரலாற்றிலேயே மிக மோசமான எண்ணெய் விலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு முயற்சிப்பதும், மறுபுறம் இராணுவ அழுத்தங்களைத் தொடர்வதும் பிராந்தியத்தில் பதற்றத்தை நீடிக்கச் செய்துள்ளது. ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா அச்சுறுத்தியுள்ள நிலையில், ஹடாமியின் இந்த உரை ஈரானின் பதிலடித் தாக்குதலுக்கான தயார் நிலையை வெளிப்படுத்துவதாகப் பார்க்கப்படுகிறது.

