ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பயா (Baya), ஜாபர் (Jafar) மற்றும் கோவ்சர் (Kowsar) ஆகிய மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களே இவ்வாறு ஒரே ராக்கெட் மூலம் செலுத்தப்படவுள்ளன.
இது குறித்து, ஐ.எஸ்.ஏ எனப்படும் ஈரான் விண்வெளி அமைப்பின் (Iran Space Agency – ISA) தலைவர் ஹசன் சலாரியே கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “பல ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகள் விதித்த பல்வேறு தடைகள் இருந்த போதும், விண்வெளித் திட்டத்தில் பெரிய முன்னேற்றங்களை ஈரான் கண்டுள்ளது.”
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பயா, ஜாபர் மற்றும் கோவ்சர் ஆகிய மூன்று செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
இந்தச் செயற்கைக்கோள்கள் விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை தொடர்பான தரவுகளை வழங்கும். இதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

