ஈரானில் 16-வது நாளாக நீடிக்கும் போராட்டம்: வான்வழித் தாக்குதல் குறித்து ட்ரம்ப் தீவிர ஆலோசனை!

44537527 twatw

ஈரானில் வரலாறு காணாத பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக வெடித்துள்ள மக்கள் போராட்டம் இன்று 16-வது நாளாகத் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட இராணுவ நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆலோசித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 28-ஆம் திகதி தொடங்கிய இந்தப் போராட்டம், தற்போது ஈரானின் 31 மாகாணங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட நகரங்களுக்குப் பரவியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பின் தகவல்படி, இதுவரை 544 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், 10,681 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன்முறையைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி, நாடு முழுவதும் இணையச் சேவையை ஈரான் அரசு முடக்கியுள்ளது. அரசு ஊடகங்கள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் (Karoline Leavitt) இது குறித்துத் தெரிவிக்கையில் ஈரான் விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் அதிபர் ட்ரம்பின் மேசையில் உள்ளன. இதில் ஈரான் மீது வான்வழித் தாக்குதல் (Airstrikes) நடத்துவதும் ஒரு தெரிவாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

ஈரான் அரசின் செயல்பாடுகள் குறித்து உலகுக்குத் தெரிந்தவற்றை விட, அமெரிக்க அரசுக்குக் கிடைத்துள்ள தனிப்பட்ட உளவுத் தகவல்கள் முற்றிலும் வேறானவை. அவற்றை வெளிப்படுத்த அதிபர் ஆர்வமாக உள்ளார்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே ட்ரம்ப்பின் முதல் விருப்பம் என்றாலும், தேவைப்பட்டால் இராணுவ நடவடிக்கையை எடுக்க அவர் ஒருபோதும் தயங்கமாட்டார்.

அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலைவாசி உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மையால் விரக்தியடைந்துள்ள ஈரான் மக்கள், தற்போதைய ஆட்சி மாற்றத்தைக் கோரி வீதிகளில் இறங்கியுள்ளனர். சர்வதேசத் தடைகள் மற்றும் உள்நாட்டு நிர்வாகச் சீர்கேடுகளே இந்தப் பொருளாதாரத் தேக்கநிலைக்குக் காரணம் எனப் பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

 

Exit mobile version