அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது தெரிவித்த கருத்துகளுக்கு, ஈரான் இராணுவம் மிகக் கடுமையான மற்றும் ஆக்ரோஷமான பதிலடியைக் கொடுத்துள்ளது. அமெரிக்கா பாரிய பின்னடைவையும், நிரந்தர அவமானத்தையும் சந்திக்கும் வரை தற்போதைய போர் நடவடிக்கைகள் தொடரும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரான் அரசு ஊடகமான ‘பிரஸ் டி.வி’ (Press TV) வாயிலாக கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், அமெரிக்காவின் உளவுத் தகவல்கள் அனைத்தும் தவறானவை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஈரானின் உண்மையான இராணுவ ஆற்றல் மற்றும் ஆயுதக் கிடங்குகள் குறித்து அமெரிக்காவிற்கு முறையான தகவல்கள் இல்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “எங்களின் முக்கியமான ஏவுகணை உற்பத்தித் தளங்கள், நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்கள் மற்றும் நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளை நீங்கள் அழித்துவிட்டதாகக் கற்பனை செய்ய வேண்டாம். அத்தகைய தவறான அனுமானங்கள் உங்களை மேலும் ஆழமான சகதிக்குள் தள்ளும். நீங்கள் தாக்கியதாகக் கருதும் தளங்கள் மிகச் சாதாரணமானவை; எங்களின் பிரதான இராணுவ உற்பத்திகள் உங்களால் ஒருபோதும் அடைய முடியாத இரகசிய இடங்களில் நடைபெறுகின்றன” என ஈரான் இராணுவம் சவால் விடுத்துள்ளது.
முஸ்லிம் தேசத்திற்கு எதிராக அமெரிக்கா தொடங்கிய இந்தப் போருக்கான விலையை அவர்கள் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது. அமெரிக்கா வருத்தத்தையும், சரணடைதலையும் சந்திக்கும் வரை ஓயப்போவதில்லை எனத் தெரிவித்துள்ள ஈரான், ஏற்கனவே அமெரிக்கா வாங்கிய அடிகளின் தொடர்ச்சியாக, இனிவரும் காலங்களில் மேலும் பேரழிவை ஏற்படுத்தும் பாரிய தாக்குதல்களை எதிர்பார்க்கலாம் என பகிரங்கமாக எச்சரித்துள்ளது. ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தளங்களைக் குறிவைக்க அமெரிக்கா முயற்சி செய்ய வேண்டாம் என்றும், அது தோல்வியிலேயே முடியும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நேரடி மோதல் போக்கு சர்வதேச ரீதியாகப் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானின் நவீன மின்னணுப் போர் மற்றும் சிறப்பு ஆயுதங்கள் குறித்த எச்சரிக்கை, இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நிலைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. உலகளாவிய எரிபொருள் விநியோகம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்தப் போர் பெரும் சவாலாக அமையும் என சர்வதேச அரசியல் அவதானிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

